செந்தமிழ்சிற்பிகள்

மு.இராகவனார் (1878 - 1960)

மு.இராகவனார்

(1878 - 1960)

முத்துசுவாமி இராகவையங்கார் என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர்.

பிறப்பு

இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26-ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார்.[1] இவர் இளமையிலேயே தம் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரைத் தேவர் இவரை வளர்த்துக் கல்வி புகட்டினார்.

 

அவைக்களப் புலவர்

மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896-ஆம் ஆண்டில் தம்முடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரைத் தேவரின் அவைக்களப் புலவர் ஆனார்.[2]

 

தமிழாசிரியர்

பாண்டித்துரைத் தேவரால் 1901-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901-ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2] அப்பணியை 1912-ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.

 

1944-ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. . எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

 

1945-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார்.[2] 1951-ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.

 

இதழாசிரியர்

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901-ஆம் ஆண்டு முதல் 1904-ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904-ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912-ஆம் ஆண்டு வரை அப்பணியைச் செவ்வனே ஆற்றினார்.[2] இவருக்கு முன்னர் 1901 – 03-ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் இரா. இராகவையங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்குப் பின்னர் 1912-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை . நாராயண ஐயங்கார் அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.

 

பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3]

 

தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர்

செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் 1913-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது.[2]

 

பதிப்பாசிரியர்

அண்ணாமலை பல்கலைக் கழகம் கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே 1951 ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைப் பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார்.[4] இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

.எண்

ஆண்டு

நூல்

01

1910

திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்

02

 

நரிவிருத்தம் அரும்பத உரையுடன்

03

 

சிதம்பரப் பாட்டியல் உரையுடன்

04

 

திருக்கலம்பகம் உரையுடன்

05

 

விக்கிரம சோழனுலா

06

 

சந்திரா லோகம்

07

 

கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை

08

1936

பெருந்தொகை

09

1936

திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்

10

1949

அரிச்சந்திர வெண்பா

11

1951

கம்பராமாயணம்பால காண்டம்

12

1953

திரிசிராமலை அந்தாதி

13

1958

கம்பராமாயணம் - சுந்தர காண்டம்

நூல்கள்

மு. இராகவையங்கார் தன்னுடைய கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை வருமாறு:

. எண்

ஆண்டு

நூலின் பெயர்

பொருள்

01

1905

வேளிர் வரலாறு

வரலாறு

02

1912

தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி

திறனாய்வு

03

1915

சேரன் செங்குட்டுவன்

வரலாறு

04

1924

தமிழரும் ஆந்திரரும்

ஆராய்ச்சி

05

1926

ஆழ்வார்கள் காலநிலை

வரலாறு

06

1929

சாசனத் தமிழ்க்கவி சரிதம்

வரலாறு

07

1938

ஆராய்ச்சித் தொகுதி

இலக்கிய ஆராய்ச்சி

08

1939

திருவிடவெந்தை எம்பெருமான்

திருமங்கை ஆழ்வார் பாடல்களின் விளக்கம்

09

1947

சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி)

இலக்கிய ஆராய்ச்சி

10

1948

செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

வரலாறு

11

1950

Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes

 

12

1950

இலக்கியக் கட்டுரைகள்

இலக்கிய ஆராய்ச்சி

13

1951

சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி)

இலக்கிய ஆராய்ச்சி

14

1958

வினைதிரிபு விளக்கம்

இலக்கணம்

15

1959

கட்டுரை மணிகள்

இலக்கிய ஆராய்ச்சி

16

1969

தெய்வப் புலவர் கம்பர்

வரலாறு

17

 

இலக்கிய சாசன வழக்காறுகள்

வரலாறு

18

 

நூற்பொருட் குறிப்பகராதி

 

19

 

நிகண்டகராதி

 

 

சொற்பொழிவாளர்

மு. இராகவையங்கார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் சில நூல்களாகவும் வெளிவந்தன. அவர் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகள் சில:

. எண்

ஆண்டு

தலைப்பு

இடம்

தலைமை

01

1929

சாசனத் தமிழ்க்கவி சரிதம்

சென்னைப் பல்கலைக் கழகம்

. வே. சாமிநாதையர்

02

1950

காந்தளூர்ச் சாலை

திருவனந்தபுரம் பல்கலைக் கழகம்

சர். சி. வி. இராமன்

03

1950

சேரத் தமிழ் இலக்கியங்கள்

திருவனந்தபுரம் பல்கலைக் கழகம்

கோபால மேனன்

04

1959

தெய்வப் புலமை

சென்னை மாநிலக் கல்லூரி

தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

05

 

கம்பனின் தெய்வப் புலமை

காரைக்குடி கம்பன் கழகம்

சா. கணேசன்

 

மறைவு

மு. இராகவையங்கார் தன்னுடைய 18-ஆம் அகவை முதல் 82-ஆம் அகவை வரை தமிழ்த் தொண்டாற்றி 1960 பிப்ரவரி 2 ஆம் நாள் மானாமதுரையில் தன் மகன் வீட்டில் மரணமடைந்தார்.























மு.இராகவனார்

(1878 - 1960)

  • மதுரைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியராகவும், பல்கலைக்கழகப்  பேராசிரியராகவும் இருந்தார். 
  • செந்தமிழ் பத்திரிகையின் ஆசிரியராகவும்,  கௌரவாசிரியராகவும், கலைமகள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர். 

 

முக்கிய நூல்கள்

சாசனக்கவி சரிதம், சேரன் செங்குட்டுவன்

ஆழ்வார் கால நிலை, வேளிர் வரலாறு

Some Aspects of Kerala from Tamil Literature

பதிப்பித்தவை

பெருந்தொகை

திவாகர நிகண்டு

தமிழ்நாவலர் சரிதை

திருக்குறள்(பரிமேலழகர் உரையுடன்)

 

ஆதாரம்: மூதறிஞர் மு.ராகவையங்கார்(2004): சா.கிருட்டிணமூர்த்தி,ச.சிவகாமி(ப.ர்).உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்